1987 மே மாதம் ரத்னபாலாவில் வெளிவந்த என்னுடைய முதல் சிறுகதை… ஒரு கோபம் சாந்தமாகிறது இந்தக் கதை நான் எழுதியபோது பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். இதை அனுப்பி 10 மாதங்களுக்குப் பின்னால் கதை ரத்னபாலாவில் வெளிவந்தது. கதை வெளியான போது 10ம் வகுப்பு முடித்து விடுமுறையில் தட்டச்சுப் பழக பொள்ளாச்சிக்கு தினமும் சைக்கிளில் சென்று வந்து கொண்டிருந்தேன். உடன் என் நண்பன் வெள்ளிங்கிரி வருவான். அவன்தான் என் கதை ரத்னபாலாவில் வந்திருப்பதாகச் சொன்னான். நான் முதலில் நம்பவில்லை. அவன் வீட்டில்தான் ரத்னபாலா வாங்குகிறார்கள். பொள்ளாச்சி மாரியம்மன் கோயில் பக்கத்தில் இருக்கும் புத்தகக் கடையில் ரத்னபாலாவை வாங்கிப் பார்த்தபோதுதான் நம்பிக்கையே வந்தது. அப்போது நான் எந்த மாதிரியான மகிழ்ச்சியை அடைந்தேன் என்பது மறந்து போய்விட்டது. ஆனால் இரவெல்லாம் ரத்னபாலாவை புரட்டி புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது ஞாபகத்தில் இருக்கிறது.
இந்தக் கதையைப் பற்றி ஒரே ஒரு அண்ணன் மட்டும் நூலகத்தில் என்னைப் பார்த்துவிட்டு விசாரித்தார். “தம்பி நீதானா கனகராஜன்? உன்னோட கதையை ரத்னபாலாவில பார்த்தேன்.”
அப்புறம் இதற்கான சன்மானத் தொகை ரூ.15 ஒரு வருடம் கழித்து அனுப்பிவைத்திருந்தார்கள். அப்போது +1 முடித்துவிட்டிருந்தேன்.
அண்மைய மறுமொழிகள்